சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
கறைக் கண்டன் சருக்கம்

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
12.480   கணம்புல்ல நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.480 கணம்புல்ல நாயனார் புராணம்   ( )
திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.
[1]
அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.
[2]
தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.
[3]
தில்லைநகர் மணிமன்றுள்
ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி
அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச்
சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி
எரித்துவரும் அந்நாளில்.
[4]
ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.
[5]
இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.
[6]
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
[7]
தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
[8]
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
[9]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
12.490   காரிநாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
[1]
அங்கவர்தாம் மகிழும்வகை
அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால்
பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும்
தானங்கள் பலசமைத்தார்.
[2]
யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.
[3]
ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.
[4]
வேரியார் மலர்க்கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி
அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை
வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம்.
[5]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
12.500   நின்ற சீர் நெடுமாற  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.
[1]
அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச்
செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச்
சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில்
புரவலனார் பொலிகின்றார்.
[2]
ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.
[3]
எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.
[4]
வயப்பரியின் களிப்பொலியும்
மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும்
கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின்
மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று
தாம்விடுக்கும் படிதயங்க.
[5]
தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.
[6]
இனையகடுஞ் சமர்விளைய
இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து
முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை
பூழியர்வேம் புடன்புனைந்து.
[7]
வளவர்பிரான் திருமகளார்
மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந்
தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க்
கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்.
[8]
திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.
[9]
பொன்மதில்சூழ் புகலிகா
வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார்
செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம்
பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
[10]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
12.510   வாயிலார் நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.
[1]
நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
[2]
கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றும்முத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமும்
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.
[3]
தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.
[4]
வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.
[5]
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.
[6]
வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதல் தோன்றியே
நாய னார்திருத் தொண்டில் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.
[7]
மறவாமை யால்அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும்
ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம்
எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும்
அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.
[8]
அகமலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமைநாளும்
நிகழவரும் அன்பினால்
நிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாட்செய்து
சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்.
[9]
நீராருஞ் சடையாரை
நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால்
அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற
பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர்
முனையடுவார் திறம்உரைப்பாம்.
[10]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
12.520   முனையடுவார் நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.
[1]
விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார்
கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில்
உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு
மாறா தளிக்கும் வாய்மையார்.
[2]
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்
வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால்
அதனை நடுவு நிலைவைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால்
கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த
பொன்னுங் கொண்டு மன்னுவார்.
[3]
இன்ன வகையால் பெற்றநிதி
எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக்
கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால்
கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா
வழித்தொண் டாற்றி வைகினார்
[4]
மற்றிந் நிலைமை பன்னெடுநாள்
வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து
பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார்
என்னு நாமம் முன்னுடையார்.
[5]
யாவர் எனினும் இகலெறிந்தே
ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார்
விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
[6]
செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும் குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
[7]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool